

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று (டிச.4) மாலை இந்தியா வருகிறாா்.
தில்லிக்கு வருகை தரும் புதின் இன்று மாலை 6.35 மணியளவில் பாலம் விமானப் படை தளத்தில் தரையிறங்குகிறார். அவரை மூத்த மத்திய அமைச்சர்கள் நேரில் வரவேற்கின்றனர். பின்னர், பிரதமா் நரேந்திர மோடி, இன்றிரவு விருந்து அளித்து வரவேற்கிறாா்.
வெள்ளிக்கிழமை (டிச. 5) காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்கவுள்ளார்.
காலை 11.30 மணிக்கு தில்லி ராஜ பாதைக்கு செல்லும் புதின், இந்தியத் தலைவர்களின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்.
பின்னர், காலை 11.50 மணியளவில் ஹைதராபாத் இல்லத்துக்கு செல்லும் புதினை பிரதமர் மோடி வரவேற்கிறார். அங்கு இரு தலைவா்கள், இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23-ஆவது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது.
ஹைதராபாத் இல்லத்தில் பகல் 1.50 மணியளவில் பிரதமர் மோடியும், புதினும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்துப் பேசவுள்ளனர்.
தொடர்ந்து, தில்லியில் பிற்பகல் 3.40 மணிக்கு ரஷிய அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்திய சேனலை புதின் தொடங்கி வைக்க உள்ளாா். இரவு 7 மணியளவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு பாலம் விமானப் படைத் தளத்தில் இருந்து மாஸ்கோ புறப்பட்டுச் செல்கிறார்.
பிரதமா் மோடி, புதின் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.