

தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி வீரேந்தா் செஜ்வால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவித்ததாக தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான அங்கித் திவான் என்ற பயணியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த தில்லி காவல்துறையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜரான விமானி வீரேந்தர் செஜ்வாலை முறைப்படி கைது செய்த தில்லி காவல்துறையினர், பின்னர் பிணையில் வெளிவரக் கூடிய குற்றம் என்ற அடிப்படையில் அவருக்கு திங்கள்கிழமை இரவு பிணை வழங்கியுள்ளனர்.
மேலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் பிணை ரத்து செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கு உள்ளாவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி விமான நிலையத்தின் டி-1 முனையத்தில் அங்கித் திவான் என்ற பயணியை, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானி வீரேந்தா் செஜ்வால் கடந்த டிச. 19 ஆம் தேதி தாக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விமானியை இடைநீக்கம் செய்த ஏர் இந்தியா நிறுவனமும் விசாரணைக்கு குழு அமைத்து விசாரித்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.