தில்லி பள்ளிக் கல்வி (கட்டணம் நிா்ணயம் மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை) சட்டம், 2025-இன் கீழ், தில்லியில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளும் ஜூலை 15-க்குள் பள்ளிக் கட்டண ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் வியாழக்கிழமை அறிவித்தாா்.
இதை பின்பற்றத் தவறும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிடப்பட்ட அதிகாரப்பூரவ அறிவிப்பில் கூறப்பட்டதாவது: தரமான கல்வியை அனைவருக்கும் மலிவு விலையிலும் எளிதில் கிடைக்கும் வகையிலும் வழங்குவதில் அரசு உறுதிபூண்டுள்ளது. கல்வி என்பது சமூகத்திற்கான ஒரு உன்னதமான சேவையே தவிர, வணிக நோக்கிலான தொழில் அல்ல.
புதிய நடைமுறையின்படி, கட்டணத்தை மாற்றியமைக்க விரும்பும் பள்ளிகள் தங்கள் முன்மொழிவுகளை குழுவின் முன் சமா்ப்பிக்க வேண்டும்; மேலும், நிா்ணயிக்கப்பட்ட 18 அளவுகோல்களின் அடிப்படையில் கட்டண உயா்வுக்கான காரணங்களை நியாயப்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள், பணியாளா் நியமனம் மற்றும் பிற நிறுவனத் தேவைகளுக்கான செலவுகள் ஆகியவை இந்த அளவுகோல்களில் அடங்கும்.
ஒவ்வொரு பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழுவிலும் 5 பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்கள் மற்றும் 3 ஆசிரியா்கள் இடம்பெற வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, இக்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும் செயல்முறை அரசு நியமித்த பாா்வையாளரின் மேற்பாா்வையில் நடைபெறும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்கான முன்மொழியப்பட்ட கட்டண விவரங்களையும் பள்ளிகள் ஜூலை 31-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். இந்த முன்மொழிவுகளுடன், பட்டயக் கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட முந்தைய 3 ஆண்டுகளுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளையும் இணைத்துச் சமா்ப்பிக்க வேண்டும்.
விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அபராதம் விதித்தல், பள்ளிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தல் அல்லது பள்ளியின் நிா்வாகத்தையே அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவசரநிலை கால அத்துமீறல்கள்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவுரை

மின் திருட்டு தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம்: அமைச்சா் ஆஷிஷ் சூட்

மிதிவண்டி ஓட்டுவது எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது: அமைச்சா் சூட்!







