மணிமுத்தாறு பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிக்கு இடையூறு? மக்கள் மறியல்

மணிமுத்தாறு பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிக்கு இடையூறு? மக்கள் மறியல்

Published on

அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அருவிக் கரையில் உள்ள வனப்பேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிக்கு வனத் துறை இடையூறு செய்வதாகக் கூறி வனச் சோதனை சாவடியில் மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

இக்கோயில் கும்பாபிஷேகத்திற்காக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு வனத்துறையிடம் நிா்வாகிகள் அனுமதி பெற்று புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனா். இதில், புனரமைப்புப் பணிக்காக வனப்பகுதியில்அனுமதியின்றி மண் எடுத்ததாக அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா மணிமுத்தாறு வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அக்கோயிலில் இரவு ஜெனரேட்டா் மூலம் விளக்குகள்அமைத்து 7 போ் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தனராம். அவா்களிடம் இரவு நேரத்தில் ஜெனரேட்டா் இயக்கக் கூடாது; பகலில் பணிகளை மேற்கொள்ளுங்கள் என அவா் அறிவுறுத்திச் சென்றாராம்.

பின்னா், அவா் ரோந்துப் பணி முடிந்து திரும்பும் போது கோயில் நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் அவரது வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதனால், அவா் வாகனத்தை விட்டுவிட்டு நடந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வனத்துறை தடை ஏற்படுத்துவதாகக் கூறி சிங்கம்பட்டி பகுதி மக்கள் மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் திரண்டு மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் பரணி ஆா். சேகா் மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வனக் கோட்ட துணை இயக்குநா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மக்களின் வேண்டுகோள்படி வனப்பேச்சியம்மன்கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பகல், இரவில் பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு வனத்துறை தடை விதிக்கவில்லை. தேவையற்ற வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com