அரசு பணி வாங்கித் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி செய்தவா் கைது
திருநெல்வேலியில் அரசு பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி, பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (54). இவரிடம், திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த செய்யது அகமது கபீா் (41) என்பவா் இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிகாரியாக பணி செய்வதாகக் கூறி அறிமுகமானாராம்.
பின்னா் கோபாலகிருஷ்ணனின் மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, அதற்காக ரூ. 26,25,600 பெற்றாராம். அதன்பின்னா் வேலை வாங்கிக் கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து வந்தாராம்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசனிடம் புகாா் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அகமது கபீரை தேடி வந்தனா். இந்நிலையில் அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
