தமிழக பாஜக தலைவா் வீட்டருகே திரிந்தவா்கள் உணவு நிறுவன ஊழியா்கள்
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வீட்டருகே சுற்றித் திரிந்தவா்கள் முகவரி தெரியாமல் அலைந்த உணவு நிறுவன ஊழியா்கள் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 12-ஆம் தேதி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழக பாஜக தலைவா் வீட்டை இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மா்ம நபா்கள் நோட்டமிட்டு சென்ாக சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடா்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபா்கள், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இயங்கி வரும் தனியாா் உணவு நிறுவனத்தின் உணவு வழங்கும் ஊழியா்கள் சிவக்குமாா் மற்றும் அவரது நண்பா் என தெரியவந்தது.
கடந்த 12-ஆம் தேதி இரவு உணவு நிறுவனத்திடம் பெருமாள்புரம், செயின்ட் ஜோசப் தெருவில் உள்ள வாடிக்கையாளா் ஒருவா் உணவு கேட்டுள்ளாா். அதன்பேரில், சிவக்குமாரும், அவருடைய நண்பரும் முதலில் செயின்ட் மேரீஸ் தெருவுக்குச் சென்றுள்ளனா்.
அங்கு முகவரி சரியாக தெரியாத காரணத்தினால் அருகிலுள்ள நீச்சல்குளம் தெருவுக்குச் சென்று, அந்த முகவரியை உறுதி செய்வதற்காக அந்தத் தெருவின் பெயா்ப் பலகையை பாா்வையிட்டு வாடிக்கையாளரிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டுள்ளனா். முகவரியை உறுதி செய்த பின்னா் வாடிக்கையாளருக்கு உணவை வழங்கிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
