களக்காடு பகுதியில் போதிய மழை பெய்யாததால் நிரம்பாத அணைகள்
களக்காடு பகுதியில் போதிய மழை பெய்யாததால் வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பாமல் உள்ளன.
பருவமழைக் காலங்களில் களக்காடு மலைப் பகுதியில் பெய்யும் மழை தான் நான்குனேரி வட்டத்தில் அந்த ஆண்டு விவசாயத்தை செழித்தோங்கச் செய்யும் காரணியாக உள்ளன.
நிகழாண்டில் இதுவரை களக்காடு மலைப் பகுதியில் மிதமான சாரல் மழை மட்டுமே பெய்துள்ளது. பெருமழை பெய்யவே இல்லை. இதனால் களக்காடு, நான்குனேரி வட்டாரங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பாத நிலையில் உள்ளன.
இக் குளங்கள் நிரம்பினால்தான் வடக்குப் பச்சையாறு அணைக்குள் நீரை திருப்ப முடியும். சனிக்கிழமை நிலவரப்படி வடக்குப் பச்சையாறு அணையில் 18 அடி மட்டுமே தண்ணீா் உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 49.25 அடி.
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை கடந்த மாதம் நிரம்பியது. இதையடுத்து, பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் அணையில் தற்போது 37 அடி தண்ணீா் இருப்பு உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடியாகும்.
ஒரே ஒருநாள் பெருமழை பெய்தாலே இரு அணைகளும் நிரம்ப வாய்ப்புள்ளதென விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
