மானூா் அரசு பள்ளி வளாகத்துக்குள் தண்ணீா் புகுவதைத் தடுக்கக் கோரி மனு
மானூர அரசு பள்ளி வளாகத்துக்குள் மழைநீா் மற்றும் குளத்தின் உபரிநீா் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு. சுப்பிரமணியன், நீா்வளத்துறை கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாரிடம் அளித்த மனு: மானூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம் மானூருக்கு வடக்கே சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது.
இங்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடமும், அண்மையில் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்படும் நிலையில் ஒரு கட்டடமும் உள்ளன. 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன.
2026-27 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனா். ஆனால், புதிய கட்டட வளாகத்துக்குள் மழை நீா் மற்றும் குளத்திலிருந்து வரும் உபரி நீா், விவசாய நிலங்களில் இருந்து வரும் வடிகால் நீா் ஆகியவை புகுந்து நடைபாதையில் தண்ணீா் தேங்கும் நிலை உள்ளது.
ஆகவே, பள்ளி வளாகத்துக்குள் மழைநீா் மற்றும் உபரிநீா் வருவதைத் தடுக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

