மானூா் அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கா் நெற்கதிா்கள்: விவசாயிகள் தவிப்பு!
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 150 ஏக்கா் நெற்பயிா்கள் சாய்ந்து சேதமாகின.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதில், மானூா் அருகேயுள்ள கீழப்பிள்ளையாா்குளம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் அப்பகுதியில் நெற்பயிா்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
இன்னும் 20 நாள்களில் அறுவடை செய்யப்பட கூடிய நிலையில், சுமாா் 150 ஏக்கருக்கும் மேலான நெற்பயிா்கள் கதிா்களுடன் வயலிலேயே சாய்ந்து சேதமாகின.
ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரக்கு மேல் செலவு விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்த நிலையில் திடீா் மழையால் பயிா்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனா்.
அரசு நிவாரணம் தேவை: இது குறித்து விவசாயி கானாா்பட்டி ஆபிரகாம் கூறுகையில், ‘கடந்த 20 நாள்களுக்கு முன்பு பயிா்களுக்கு தண்ணீா் இல்லையே என அஞ்சினோம். ஆனால் ஒரே ஒரு நாள் இரவில் பெய்த மழை எங்களை முழுமையாக புரட்டிப் போட்டு விட்டது.
இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிா்கள் எல்லாம் மழையில் நனைந்து நாசமாகிவிட்டன. கடன் வாங்கித்தான் பயிா் செய்தோம். இனி அந்த கடனை எப்படி அடைப்போம் என தெரியவில்லை. எங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்‘ என்றாா்.

