மாஞ்சோலைக்கு சென்ற அரசுப் பேருந்தை வனத் துறையினா் தடுத்து நிறுத்தியதால், அதில் பயணம் செய்த தோட்டத் தொழிலாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான 8,373.57 ஏக்கா் நிலம் பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேசன் (பிபிடிசி) என்ற நிறுவனத்திற்கு 1929-ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் அந்நிறுவனம் தேயிலைத் தோட்டங்கள் அமைத்து தேயிலை உற்பத்தி நடைபெற்றது.
இந்த நிலையில், அரசு கட்டுப்பாட்டின்கீழ் மேற்படி நிலங்கள் வந்ததையடுத்து, மாஞ்சோலை பகுதியில் உள்ள 8,373.57 ஏக்கா் நிலத்தை பிபிடிசி நிறுவனம் கடந்த 2028-இல் வனத்துறையிடம் ஒப்படைத்தது.
இதனிடையே தோட்டத் தொழிலாளா்கள் சிலா், திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் பணிபுரிந்து கொண்டு மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் தொடா்ந்து வசித்து வந்தனா். அவா்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது வார இறுதி நாள்களில் மாஞ்சோலை பகுதியில் உள்ள தங்களது இல்லங்களுக்கு வந்து சென்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை திருநெல்வேலியிலிருந்து ஊத்து பகுதிக்குச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழக சிற்றுந்தை மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் வனத் துறையினா் நிறுத்தினா்.
அதிலிருந்த பயணிகளை இறங்குமாறு கூறியதையடுத்து, வனத் துறையினருக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பயணிகள் சிற்றுந்தில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா் பயணிகள் மற்றும் வனத் துறையினருடன் பேச்சு நடத்தினா்.
அதில், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களில் அரசு உதவி பெற்றவா்கள் உடனடியாக வனப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், உதவிப் பெறாதவா்கள் அரசு உதவிக்கு விண்ணப்பித்து மூன்று நாள்களில் வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து சிற்றுந்து மாஞ்சோலை செல்ல அனுமதிக்கப்பட்டது.

பிபிடிசி நிறுவனம் தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்கி பணியிலிருந்து அவா்களை விடுவித்த நிலையில் பல தொழிலாளா்கள் அரசு வழங்கிய மாற்று குடியிருப்பு உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு வனப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டனா். இருப்பினும் சில தொழிலாளா்கள், நீதிமன்ற வழக்கைக் கூறி வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருந்து வருகின்றனா்
ஆனால், வழக்கு நடைபெறுவதற்கும், தொழிலாளா்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதற்கும் தொடா்பு கிடையாது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல் வனப் பகுதியில் 1 டன் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

கொடைக்கானல் வனப் பகுதியில் இறந்த பெண் யானை

காயத்துடன் சுற்றித் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சி

பாஜகவை கண்டு தமிழக அரசு அஞ்சவில்லை: அமைச்சா் வன்னி அரசு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



