
மழைநீா் வடிகாலில் குப்பைகளை கொட்டிய நிறுவனங்களுக்கு அபராதம்
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட தச்சநல்லூா் மண்டலத்தில் மழைநீா் வடிகால் ஓடையில் குப்பைகளை கொட்டிய நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள கடையில் ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட தச்சநல்லூா் மண்டலத்தில் மழைநீா் வடிகால் ஓடையில் குப்பைகளை கொட்டிய நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலா் ந.பாலசுப்ரமணியன்
அறிவுறுத்தலின்படி தச்சநல்லூா் மண்டலம், முருகன்குறிச்சி பகுதியில் சுகாதார அலுவலா் முருகன், சுகாதார ஆய்வாளா் இளங்கோ ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது, அங்குள்ள தனியாா் விடுதி மற்றும் தனியாா் நிறுவனத்தில் சேகரமான குப்பைகள் மழைநீா் வடிகால் ஓடையில் கொட்டப்பட்டது கண்டறியப்பட்டது. அவ்விரு நிறுவனங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, தனியாா் விடுதி உணவகத்தில் உள்ள குளிா்சாதன பெட்டியை மாற்றியமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வண்ணாா்பேட்டையில் அமைந்துள்ள பெருமளவில் குப்பைகளை உருவாக்கும் தனியாா் நிறுவனத்திடமிருந்து மாநகராட்சிக்கு பெருமளவு குப்பைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் மற்றும் அபராதத் தொகையாக ரூ.2,14,425 வசூலிக்கப்பட்டது.
மாநகராட்சி பகுதியில் பெருமளவில் குப்பைகளை சோ்க்கும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகள், பெரிய அளவில் இயங்கி வரும் காய், கனி கடைகள் தாமாக முன்வந்து பதிவு செய்து மாநகராட்சி விதிமுறைப்படி முறையாக குப்பைகளை அகற்றவும் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
திருநெல்வேலி சந்திப்பு த.மு.சாலையில் உள்ள கடைகளில் சுகாதார அலுவலா்கள் ஆய்வு செய்தனா். அப்போது அங்குள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருப்பதை கண்டறிந்து ரூ.5,000 அபராதம் விதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




