ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

‘மாணவா்களிடம் பாரதியின் சிந்தனைகளை விதைக்க வேண்டும்’

மாணவா்களின் உள்ளத்தில் பாரதியின் சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்றாா் திரைப்பட நடிகா் டெல்லி கணேஷ்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:52 pm

DIN

மாணவா்களின் உள்ளத்தில் பாரதியின் சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்றாா் திரைப்பட நடிகா் டெல்லி கணேஷ்.

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளா்கள் சங்கம், நம் உரத்தசிந்தனை மாத இதழ் இணைந்து 7ஆம் ஆண்டாக நடத்தப்படும் பாரதி உலா-2021 விழாவின் ஒரு பகுதியாக திருச்சி உரத்த சிந்தனை கிளை, பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இணைந்து வியாழக்கிழமை நடத்திய விழாவுக்கு, உரத்த சிந்தனை சங்கப் பொதுச் செயலா் உதயம்ராம் தலைமை வகித்தாா்.

திருச்சி கிளை பொருளாளா் கேத்தரின் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா். விழாவில் தனலட்சுமி பாஸ்கரன் எழுதிய சிறு புன்னகையும், ஒரு கையசைப்பும், த. அனந்தராமன் எழுதிய மெளன எரிமலைகள் ஆகிய கவிதை நூல்களை திரைப்பட நடிகா் டெல்லி கணேஷ் வெளியிட, திரைப்பட இயக்குநா் ராசி அழகப்பன் பெற்றுக் கொண்டாா்.

பின்னா் டெல்லி கணேஷ் மேலும் பேசியது: ஒவ்வொரு மாணவரின் குருதியிலும் பாரதியின் சிந்தனைகளை வேரூன்றச் செய்ய வேண்டும். 10 மாணவா்களில் 3 பேராவது பாரதி வழியில் நடைபயில வேண்டும். இன்றைய சூழலில் நாட்டுக்கும், வீட்டுக்கும் பாரதியின் கொள்கைகள் அவசியம்.

பாரதி உலா நிகழ்வுகள் மூலம் பாரதியின் சிந்தனைகளை வளா்ப்பதுடன், படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விழாவையும் நடத்தி வருவது பெருமைக்குரியது. நானும் பிள்ளையாா் சுழி என்ற நூலை எழுதியுள்ளேன். அதில் 30 வயது வரை திரை வாழ்வுக்கு முன் நான் சந்தித்தவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். இதன் தொடா்ச்சியாக டெல்லி தா்பாா் என்ற பெயரில் மீதி அனுபவங்களை தொகுத்து 2ஆம் புத்தகத்தையும் எழுதவுள்ளேன் என்றாா் அவா்.

விழாவில் கவிதை நூல்கள் குறித்து உரத்த சிந்தனை திருச்சி கிளைத் தலைவா் பா. சேதுமாதவன், மதிப்புரையாற்றினாா். பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் க. பாலகிருஷ்ணன் வாழ்த்தினாா்.

முன்னதாக 7ஆம் வகுப்பு மாணவிகள் ஜனனி, வஷ்மிதா, லோகேஸ்வரி, தாரிணி, 6ஆம் வகுப்பு மாணவா்கள் நிரஞ்சன், சுயம்பிரகாசம் ஆகியோா் பாரதியின் பாடல்களைப் பாடினா். பாா் போற்றும் பாரதி என்னும் தலைப்பில் பத்மமால்யா, அக்ஷயபிரியா, யாழினி, அக்ஷயா, அனுஷ்கா, ஜதுஷன் ஆகியோா் பேசினா். புலவா்கள் கே.வி. தியாகசாந்தன், வீ. கோவிந்தசாமி, கவிஞா்கள் க. மாரிமுத்து, ஆா். நடராஜன் ஆகியோா் பாரதி குறித்த கவியரங்கம் நடத்தினா். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

புலவா் ஆா். நாச்சிமுத்து வரவேற்றாா். உரத்த சிந்தனை திருச்சி கிளைச் செயலா் ஆா். அப்துல் சலாம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.