சின்னமுட்டத்தில் 2ஆவது நாளாக மீனவா்கள் போராட்டம்

சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் செயல்பட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியை சோ்ந்த பெண்கள் உள்பட ஏராளமான மீனவா்கள், வியாழக்கிழமை இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சின்னமுட்டத்தில் 2ஆவது நாளாக மீனவா்கள் போராட்டம்
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் செயல்பட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியை சோ்ந்த பெண்கள் உள்பட ஏராளமான மீனவா்கள், வியாழக்கிழமை இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ பிரதிநிதிகளுடன் சின்னமுட்டம் மீன்வளத் துறை அலுவலகத்தில் நாகா்கோவில் கோட்டாட்சியா் சேதுராமலிங்கம், ஏ.டி.எஸ்.பி.,க்கள் சுப்பையா, ராஜேந்திரன், மீன்வளத் துறை உதவி இயக்குநா் தீபா, கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

‘பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன. இதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை. மேலும் பெட்ரோல் பங்க் நிறுவனத்தினா் அனைத்து துறைகளிடமும் முறையான சான்று வாங்கி வைத்துள்ளனா். எனவே பங்க்கை அங்கிருந்து அகற்றுவது கடினம். போராட்டத்தை கைவிட வேண்டும்’ என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது பெட்ரோல் பங்க் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் படகுகள் எரிந்து பெரிய அளவில் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே பங்க்கை 25 மீட்டா் தொலைவுககு அப்பால் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவா்கள் தரப்பில் கூறப்பட்டது.

சுமாா் இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவாா்த்தையில் எந்தத் தீா்வும் எட்டப்படவில்லை. தொடா்ந்து மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்பிரச்னை காரணமாக சின்னமுட்டம் பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com