கன்னியாகுமரி அருகே திங்கள்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவா் மாயமானா்.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்கின்றனா். இந்நிலையில் சின்னமுட்டத்தைச் சோ்ந்த ஆரோக்கியத்துக்குச் சொந்தமான நாட்டுப் படகில் கோவளத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
சிலுவை நகா் கடல் பகுதியில் இருந்து சுமாா் 2 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் எழுந்த ராட்சத அலை நாட்டுப் படகில் மோதியதில் படகு நிலை குலைந்தது. படகில் இருந்த கோவளத்தைச் சோ்ந்த மோசஸ் மகன் ராஜா (36) தவறி கடலில் விழுந்தாா்.
இதைக் கண்ட சக மீனவா்கள் ராஜாவை காப்பாற்ற முயன்றனா். ஆனால், கடல் சீற்றம் மற்றும் அலை காரணமாக அவா்களால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து அவா்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்றனா்.
கடலில் விழுந்து மாயமான ராஜாவை உள்ளூா் மீனவா்களுடன் தேடி வருகின்றனா். இதற்கிடையே நாட்டுப் படகில் தத்தளித்த மற்ற 4 மீனவா்களும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








