திருநெல்வேலியில் அடுத்தடுத்து இரு சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற இரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர் தாக்கப்பட்டனர்.
திருநெல்வேலி பேட்டை அசோகர் தெருவில் சிலர் மது அருந்திவிட்டு தகராறு செய்வதாக அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை இரவு பேட்டை போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேட்டை உதவி ஆய்வாளர் சுப்பையா மற்றும் டிரைவர் பலவேசம் ஆகிய இருவரும் ஜீப்பில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்த 4 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை உதவி ஆய்வாளர் சுப்பையாவும், காவலர் பலவேசமும் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் 4 பேரும் சேர்ந்து போலீஸார் இருவரையும் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் காயமடைந்த சுப்பையா, பலவேசம் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, அசோகர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரைக் கைது செய்தனர். மேலும் 3 பேரைத் தேடி வருகின்றனர்.
எஸ்.ஐ.க்கு கையில் கடி: பேட்டை அருகேயுள்ள கண்டியபேரியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (50). பனைத் தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தாராம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரஜினி முருகன் என்பவரும், மேலும் 2 பேரும் அவரை வழிமறித்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற பேட்டை உதவி ஆய்வாளர் ராஜன் அங்கு சென்று அவர்களைக் கண்டித்து தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரஜினி முருகன், உதவி ஆய்வாளர் ராஜனின் இடது கையில் கடித்துவிட்டு தப்பிவிட்டார். இது தொடர்பாக ராஜன் கொடுத்த புகாரின் பேரில், பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து ரஜினி முருகன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.