சங்கரன்கோவிலில் பெண்ணிடம் ரூ.4.5 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை மோசடிசெய்ததாக தேவசபை பாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்த காசிநாராயணன் மகள் காந்திமதி(30), மாற்றுத் திறனாளி. உக்கிரன்கோட்டையைச் சேர்ந்த பாண்டியன் மகன் மிலன்சிங்(46). சாயல்குடி அருகே நரிப்பையூரில் ஜீவனுள்ள தேவ சபையின் பாஸ்டராக உள்ளார். இந்த சபைக்கு காந்திமதி அடிக்கடி வருவாராம்.இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாம்.
அப்போது காந்திமதிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடம் ரூ.4.5 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை வாங்கினாராம். பல நாள்களாகியும் அவர் வேலை வாங்கித்தரவில்லையாம். இதனால் காந்திமதி பாஸ்டர் மிலன்சிங்கிடம் பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டாராம்.
அப்போது அவர் சங்கரன்கோவில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வருமாறும்,அங்கு வைத்து பணத்தையும், நகையையும் தருவதாகவும் கூறினாராம். இதையடுத்து புதன்கிழமை காலை காந்திமதி சார் பதிவாளர்அலுவலகம் அருகே வந்து நின்றாராம். அப்போது காரில் வந்த மிலன்சிங் பணத்தைத் தரமுடியாது எனக் கூறி மிரட்டி, அவர் மீது காரை ஏற்ற முயன்றாராம்.
இதுகுறித்து காந்திமதி சங்கரன்கோவில் நகர காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் மிலன்சிங்கை கைது செய்து, சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.