தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி திருநெல்வேலி அரசு மருத்துவமனை முன், அவரது உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவேங்கடம் பகுதியில் உள்ள சமையல் எரிவாயு உருளை நிறுவனத்தில், எரிவாயு உருளை வெடித்து விபத்து நேரிட்டது. இதில், அந்த நிறுவன மேலாளா் வைகுண்டம்(70), ஊழியா்கள் காளி(36), பசுபதி பாண்டியன்(25) ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைகுண்டம், காளி ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
இதில், பிரேத பரிசோதனைக்குப் பின், வைகுண்டத்தின் உடலை மட்டும் பிரஉறவினா்கள் பெற்றுச் சென்றனா். காளியின் குடும்பத்தினா், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; சமையல் எரிவாயு உருளை நிறுவனத்தினா் நேரில் பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும் எனக் கோரி, உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. எனினும்,எரிவாயு உருளை நிறுவனத்தினா் பேச்சு நடத்திய பின் செவ்வாய்க்கிழமை உடலைப் பெற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.