அவன் இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலா இன்று அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற ஆஜர் ஆனார்.
நடிகர்கள் ஆர்யா, விஷால் நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கிய திரைப்படம் அவன் இவன். இந்தப் படத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு கருத்துக்களும், காட்சிகளும் அமைக்கப்பட்டதாகக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி யின் மகன் சங்கர் ஆத்மஜன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா நேரில் ஆஜராகி மனுதாரரின் கேள்விகளுக்கு பதில் கூற குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று நேரில் ஆஜரான இயக்குநர் பாலா கேள்விகளுக்கு பதிலளித்தார். இயக்குநர் பாலா சார்பில் வழக்குரைஞர் முகம்மது உசேன் மற்றும் சங்கர் ஆத்மஜன் சார்பில் வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.