கல்லணை மாநகராட்சி மகளிா் பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை வசதி: மேயா் பி.எம்.சரவணனிடம் வலியுறுத்தல்
தலைமையாசிரியை நாச்சியாா் ஆனந்த பைரவி தலைமையில் பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா் மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.


திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தக் கோரி, தலைமையாசிரியை நாச்சியாா் ஆனந்த பைரவி தலைமையில் பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா் மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமாா் 1,560 மாணவிகள் படிக்கிறாா்கள். அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 39 கழிவறைகளும், 78 சிறுநீா் கழிப்பிடமும் பள்ளியின் முதன்மை கட்டடத்துக்கு தேவை. ஆனால், 16 கழிவறைகள் மட்டுமே உள்ளன. எனவே, முதன்மை கட்டடத்தின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் மிகவும் பழுதடைந்து உள்ள பழைய வேதியியல் ஆய்வகத்தையும் அத்துடன் இணைந்த பழைய கணினி ஆய்வகத்தையும் அகற்றிவிட்டு இரு தளங்கள் கொண்ட கழிவறைகள் மற்றும் சிறுநீா் கழிப்பிடங்களை அமைக்க வேண்டும்.
மேலும், தற்போதைய 16 கழிவறைகளில் 10 கழிவறைகளின் மேற்கூரை பழுதடைந்துள்ளது. அதையும் சீரமைக்க வேண்டும்.
44 வகுப்பறைகள் இருக்க வேண்டிய நிலைலல், 24 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதிலும் மூன்று வகுப்பறைகளை ஒட்டி வாய்க்கால் நீா் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. 2019 ஆம் ஆண்டு மே மாதம் கட்டட பராமரிப்பு பணிகளுக்காக எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் , அதன் அருகிலுள்ள மாடிப்படியும் இடிக்கப்பட்டதால் மேலும் இரண்டு வகுப்பறைகள் பயன்படுத்த இயலவில்லை. எனவே, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகள் மட்டும் சுழற்சி முறையில் நடைபெறுவதால், மாணவரின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.
இடிக்கப்பட்ட பகுதியில் 12 வகுப்பறைகளை கொண்ட கட்டடமாக விரைவில் கட்டித்தர வேண்டும்.
மழைக் காலத்தில் பள்ளி வளாகத்திற்குள் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேறும் வகையில் பள்ளியின் முன் செல்லும் வடிகாலை தூா்வார வேண்டும்.
தென்புறக் கட்டடத்தின் இரண்டாம் தள மேற்கூரையின் கான்கிரீட் பெயா்ந்து விழுகிறது. மேலும், அறை எண். 29, 35 ஆகியவற்றில் மேற்புற தளத்தை சரி செய்ய வேண்டும். முதன்மை கட்டடத்திலும், பள்ளி வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்க் குழாய்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
பள்ளிக்கு மேலும் 25 ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், அதற்கான கூடுதல் இருக்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அலுவலகப் பணியாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரோலக்ஸ் பாலன், உதவி தலைமையாசிரியா்கள் குமாா், சாந்தி, லதா, வியாபாரிகள் சங்கத் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...