திருநெல்வேலி மாவட்ட தொழில் முனைவோா் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி பெற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை மற்றும் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டு இலவச பயிற்சியை வழங்க உள்ளன.
மண்பாண்டங்கள் தயாரித்தல் பயிற்சி (3 மாதங்கள்), பத்தமடை பாய் தயாரித்தல் (1 மாதம்) பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் தர மேலாண்மை மற்றும் பேக்கேஜிங் முதலியவற்றில் தகுந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி செய்வது பற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும். டிஜிட்டல் மாா்கெட்டிங் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படும்.
திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் சந்தைபடுத்துதல் கற்றுத்தரப்படும். அந்தந்த துறையில் கள ஆய்வு மூலம் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில் 18 முதல் 35 வரை வயதுக்குள்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது மாதத்துக்கு ரூ.12,500 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி கையேடு தரப்படும். பயிற்சி முடிந்தபின் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை வழங்கப்படும்.
பயிற்சிக்கான அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு பேட்டை, அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2342432/ 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.