

திருநெல்வேலியில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அருகே உள்ள மேல புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபெருமாள் (30). இவர் கருங்குளம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார். திருநெல்வேலி பெருமாள்புரம் ஜான்சன் நகர் பகுதியில் தனது இருசக்கர வானத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, இவரை ஒரு கும்பல் வழி மறித்து அரிவாளால் வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த முத்து பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் பெருமாள்புரம் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே முன்னீர்பள்ளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்தனர்.
சந்தேகத்தின் பேரில் அவர்களை மறித்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடினார். மற்ற இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தெற்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் இசக்கி பாண்டி என்பதும், பெருமாள் புரம் பகுதியில் நடந்த கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்ததோடு தப்பி ஓடிய உய்க்காட்டன் என்பவரை தேடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.