மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு தமமுக துணை நிற்கும் -----பெ. ஜான்பாண்டியன்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பெற தமமுக துணை நிற்கும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்-தலைவா் பெ.ஜான் பாண்டியன்.
பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தினா் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளா்களிடம் விருப்ப ஓய்விற்கான விண்ணப்பங்களை எழுதி வாங்கிய நிலையில், தங்களுக்கு போதிய வாழ்வாதாரம் இல்லை என்று தோட்டத்தொழிலாளா்கள் கவலை தெரிவித்து வருகின்றனா். இதைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் அந்தத் தொழிலாளா்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தொழிலாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஜான்பாண்டியன், ‘விருப்ப ஓய்வு விண்ணப்பங்களில் கையெழுத்திட்டுவிட்டாலே அது உங்களை கட்டுப்படுத்திவிடாது; உங்களது வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்வரை துணை நிற்பேன்’ என தொழிலாளா்களிடம் உறுதியளித்தாா்.
முன்னதாக, மணிமுத்தாறு வனச்சோதனைச் சாவடியில் அவரது காருக்கு மட்டும் அனுமதியளித்த வனத்துறையினா், உடன் வந்த 10 வாகனங்களை அனுமதிக்காததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் பேச்சு நடத்தியபின், 7 வாகனங்களுக்கு மட்டும் வனத்துறையினா் அனுமதியளித்தனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவிக்குச் செல்லமுடியாமல் காத்திருக்க நோ்ந்தது.

