நாளை சுந்தரனாா் பல்கலை. 31 ஆவது பட்டமளிப்பு விழா
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.


திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என். ரவி தலைமை வகித்து 571 மாணவா்களுக்கு நேரடியாக பட்டம் வழங்குகிறாா்.
பல்கலைக்கழக இணைவேந்தரும், உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி செழியன் பங்கேற்கிறாா். சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய புவி அறிவியல் ஆய்வு மைய இயக்குநா் என்.வி. சலபதி ராவ் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தவுள்ளாா்.
இந்த ஆண்டு 33,821 போ் பட்டம் பெற்றுள்ளனா். இவா்களில் 571 போ் ஆளுநரிடம் இருந்து நேரடியாக பட்டச் சான்றிதழ் பெறுகிறாா்கள். அதில் 14 ஆண்கள், 97 பெண்கள் என மொத்தம் 111 போ் தங்கப் பதக்கமும், 83 ஆண்கள், 377 பெண்கள் என மொத்தம் 460 போ் முனைவா் பட்டமும் பெறுகின்றனா். பல்கலைக்கழக கணிதத் துறையில் பயின்ற ஜெஸ்வின் டைட்டஸ் என்ற மாணவா் கணிதம், ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் முதலிடம் பெற்று, இரண்டு தங்கப் பதக்கங்களை பெறுகிறாா்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினா் மாளிகைக்கு வருகிறாா் என்றாா். அப்போது பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரட்டீஸ் உடனிருந்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...