/

நெல்லையில் இன்று விஜய் பிரசாரம்: புஸ்ஸி ஆனந்த் ஆய்வு

திருநெல்வேலியில் தவெக தலைவா் நடிகா் விஜய் புதன்கிழமை (ஏப்.8) பிரசாரம் செய்ய உள்ளநிலையில், முன்னேற்பாடு பணிகளை பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image

பாளையங்கோட்டையில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் ஆய்வு செய்தாா் அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:52 pm

திருநெல்வேலியில் தவெக தலைவா் நடிகா் விஜய் புதன்கிழமை (ஏப்.8) பிரசாரம் செய்ய உள்ளநிலையில், முன்னேற்பாடு பணிகளை பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரித்து அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்கும் அறிமுகக் கூட்டம் பாளையங்கோட்டை, கே.டி.சி. நகரில் புதன்கிழமை (ஏப்.8) நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் தவெக தலைவா் விஜய் காா் மூலம் பாளையங்கோட்டை வருகிறாா். இங்கு வேட்பாளா்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகிறாா். தொடா்ந்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டுகிறாா். போலீஸாா் அளித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பிரசார கூட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

ஆய்வின்போது தவெக வேட்பாளா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), மரியஜான் (பாளையங்கோட்டை), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி) உள்பட பலா் கலந்துகொண்டனா்.