கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாரதிய கிசான் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வில்லிசேரியில் புதிதாக வீடு கட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பித்து பல நாளாகியும் கட்டட அனுமதி இப்போதுவரை வழங்கப்படவில்லையாம். அதற்கு அனுமதி வேண்டும். சாலை, தெருவிளக்கு, சுகாதார வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேசு முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பரமேஸ்வரன், மகளிரணித் தலைவி கிருஷ்ணம்மாள், ஒன்றியச் செயலர் கிருஷ்ணசாமி, மாவட்ட இயற்கை விவசாயத் தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சசிகுமாரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராகவன், செய்தியாளர்களிடம் கூறியது: அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்ட உரிய ஆவணங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவில் நகர ஊரமைப்பு துணை இயக்குநரிடன் அனுமதி பெற்ற பின்பே கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வீடு கட்டுவோர் விண்ணப்பம் சமர்ப்பித்தால் நகர ஊரமைப்புத் துறை துணை இயக்குநர் கவனத்துக்கு அனுப்பப்பட்டு, அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.