தமிழக அரசின் 25 சதவீத மானியத்துடன் ரூ. 10 லட்சம் வரை தொழிற்கடன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலையில்லா இளைஞர்கள் சுய தொழில் தொடங்குவதற்காக தமிழக அரசு மானியத்துடன் வங்கிகளில் கடன் பெறும் விதமாக யூஒய்இஜிபி என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல் 45 வயது வரையுள்ள மற்றும் ஆண்டு மொத்த வருமானம் ரூ.1,50,000-க்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சம் மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.1 லட்சம் என்ற அதிகபட்ச திட்ட முதலீட்டுக்கான தொழிற்கடன் விண்ணப்பங்களை www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
பதிவு செய்தபின் பெறப்படும் விண்ணப்ப நகல்களை வயது மற்றும் கல்வித்தகுதிக்கான சான்று, விலைப்பட்டியல், திட்ட அறிக்கை நகல்களுடன் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ, பைபாஸ் ரோடு அருகில், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் தாக்கல் செய்தால் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வங்கிகளுக்கு கடன் பரிந்துரை செய்யப்படுவார்கள்.
வங்கியில் இருந்து கடன் அனுமதி பெறும் பயனாளிக்கு ரூ.600 உதவித் தொகையுடன் கூடிய ஒரு வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படுவதுடன் தமிழக அரசின் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.1.25 லட்சம்) கூடிய கடனுதவிகள் வழங்கப்படும்.
பயனாளியின் பங்காக திட்ட முதலீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டிய இந்தத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத பங்கு முதலீட்டுத் தொகையானது, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிலிருந்து பெற்று வழங்கப்படும்.
எனவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தகுதி வாய்ந்த இளைஞர்கள் தமது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து பயனடைய வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.