கோவில்பட்டி, எட்டயபுரம் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவில்பட்டி பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை பரமபத வாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவில்பட்டி பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை பரமபத வாசல் திறக்கப்பட்டது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு நீலாதேவி - பூதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து, திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி மற்றும் தாயார்களுக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை சுந்தரராஜ பெருமாள் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக வந்து சுவாமி, நம்மாழ்வாருக்கு காட்சி கொடுத்தார்.
இரவு கருட வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர்.
விளாத்திகுளம்: வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு எட்டயபுரம் வெங்கடாஜலபதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசியையொட்டி, உற்சவர் வெங்கடாஜலபதி சிம்ம பல்லக்கில் காலை 9 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். வேத மந்திரங்கள் முழங்க காலை 10 மணிக்கு உள்பிரகாரத்தில் வலம் வந்து 11 மணிக்கு பரமபத வாசலை வந்தடைந்தார். அப்போது சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக மகா மண்டபத்துக்கு வந்தடைந்த வெங்கடாஜலபதி, அங்கு எழுந்தருளியிருந்த நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார்.
பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பிக் கொண்டு சொர்க்க வாசல் வழியாக மகா மண்டப பிரகாரத்துக்கு உள்ளே சென்று இறைவனை தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ரமேஷ் ஐயர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




