தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குரல் எழுப்பப்படும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அ. குமரெட்டியாபுரம் கிராமத்தில் 92 ஆவது நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலரும், கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர் திங்கள்கிழமை கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் எழுப்பப்படும் என்றார் அவர்.