தாமிரவருணி மஹா புஷ்கர விழா நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஆழ்வார்திருநகரி சங்கணித்துறை தீர்த்த கட்டத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மஹா புஷ்கர திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஆழ்வார்திருநகரி சங்கணித்துறை தாமிரவருணி தீர்த்த கட்டத்தில் சிறப்பு பூஜைகளும், பல்வேறு யாகங்களும் நடைபெற்றன. இதில், அமைப்புச் செயலர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரன் சிவன் கோயில் வளாகத்தில் மஹா புஷ்கரணியின் நிறைவு விழாவுக்கான யாக வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் தாமிரவருணியில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் பிரம்மசக்தி தீர்த்த கட்டத்திலும் திரளான பக்தர்கள் புனித நீராடினர். மாலையில் தாமிரவருணி நதிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
ஆத்தூர், முக்காணி, ஏரல் பகுதியில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை ஆத்தூர், முக்காணி, ஏரல் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து புனித நீராடினர்.
தாமிரவருணி மஹா புஷ்கர விழா கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை ஆத்தூர் சோமதீர்த்தம் படித்துறையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கோ பூஜையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் புனிதநீராடி னர். மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
உமரிக்காடு படித்துறையில் மக்கள் முளைப்பாரி எடுத்து வந்து அருகிலுள்ள முத்தாரம்மன் திருக்கோயிலில் கும்மி அடித்து மகிழ்ந்தனர். மாலையில் நதிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
இதே போன்று வாழவல்லான் கங்கா தீர்த்த்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முக்காணி அகஸ்தியர் தீர்த்த படித்துறையிலும் மகளிர் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து வழிபட்டனர். சேர்ந்தபூமங்கலம் சண்டிகா தீர்த்தம் மற்றும் சங்கராஜ தீர்த்த படித்துறைகளிலும் நிறைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.