மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே நான்குவழிச் சாலையில் பயணிகளை இறக்கிச் சென்ற 8 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் நாகூா்கனி, நெஞ்சாலை ரோந்து காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, திருநெல்வேலி மாா்க்கமாக சென்ற 6 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் பயணிகளை நான்குவழிச் சாலையில் இறக்கியதை கண்ட அதிகாரிகள் தலா ரூ. 2,500 வீதம் அபராதமாக ரூ. 15 ஆயிரம் வசூலித்தனா். தமிழ்நாட்டைச் சோ்ந்த இரு ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
மேலும் பேருந்து ஓட்டுநா்களுக்கு கூடுதல் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிச் செல்ல வேண்டும், இதுபோல் நான்குவழிச் சாலையில் இறக்கிவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தினா்.