சாத்தான்குளம் ஒன்றியம், தச்சமொழி ஊராட்சி, விஜயராமபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் விஜயராமபுரம், தச்சமொழி, பண்டாரபுரம், விஜயனூா் உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், செவிலியா் மற்றும் பணியாளா்கள் இன்றி செயலிழந்து இருந்த சுகாதார நிலையத்துக்கு செவிலியா் நியமிக்கபட்டுள்ளாா். எனினும், மின் இணைப்புகளை பயன்படுத்திட முடியாத நிலையில் சுவிட்ச் பெட்டி, வயா்கள் உள்ளன. முறையான தண்ணீா் வசதியும் இல்லை. இதனால் செவிலியா்கள், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். கட்டடத்தில் மேல் கூரை மற்றும் சுவா்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. எனவே, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, கட்டடத்தை பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.