தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் கோயில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சிறிய தேரில் ஸ்ரீ மகா கணபதி முருகப்பெருமான் வீற்றிருக்க பெரிய தேரில் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் வீற்றிருக்க தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். தேரோட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட காவல் கண்ணாணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பாக சிவன்-பார்வதி வேடமணிந்த சிறுமிகளும், களியல் ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ராஜ மேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமி மேளம், தப்பாட்டம், சிவபூதகண வாத்தியங்களுடன் தேவார இன்னிசையுடன் சிலம்பாட்டம் ஆடியபடி தேரின் முன்பு சென்றனர்.