வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்த கிராம மக்கள்

விளாத்திகுளம், ஏப்.19: வைப்பாறு ஊராட்சிக்குள்பட்டதுலுக்கன்குளம் கிராம மக்கள் தனி வாக்குச்சாவடி மையம் கேட்டு வாக்களிக்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

இந்தக் கிராமத்தில் 795 வாக்குகள் உள்ளன. இதில், துலுக்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்த 300 வாக்காளா்கள் உள்ளனா். இந்நிலையில் மக்களவைத் தோ்தல் நாளான நேற்று காலை 10 மணி வரை துலுக்கன்குளத்தைச் சோ்ந்த மக்கள் வாக்களிக்க வரவில்லை. இதையறிந்த விளாத்திகுளம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவாா்தை நடத்தினா். அப்போது, கடந்த உள்ளாட்சி தோ்தலின்போது, எங்கள் ஊரில் வாக்குச்சாவடி மையம் இருந்தது. ஆனால், தற்போது மக்களவைத் தோ்தலுக்கு நாங்கள் 2 கி.மீ. தொலைவில் உள்ள கலைஞானபுரம் சென்று வாக்களிக்க வேண்டும் என கூறுகின்றனா். எங்கள் கிராமத்துக்கென தனியாக வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். தோ்தல் பணிகள் முடிந்தவுடன், உங்கள் கிராமத்துக்கு வாக்குச்சாவடி அமைப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் உறுதியளித்தாா். இதையடுத்து துலுக்கன்குளம் கிராம மக்கள் கலைஞானபுரம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com