அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published on

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை மாா்ச் 22- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மீன் வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரா்கள் உள்பட 7 போ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா். அவா்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கா் நிலம் உள்ளிட்ட 18 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இவ்வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு மாவட்ட நீதிபதி (பொறுப்பு) சுவாமிநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சா் தரப்பினரும், அமலாக்கத் துறை தரப்பினரும் ஆஜராகததால், விசாரணையை மாா்ச் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

Dinamani
www.dinamani.com