கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட சீவலூா் கிராமம் அருகே செயல்பட்டு வரும் கல்குவாரியை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கட்டாலங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட சீவலூா் கிராமத்தையொட்டி அமைந்துள்ள கல்குவாரியில், விதிமுறைகளை மீறி வெடிவைக்கும்போது வீடுகள் சேதமடைகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சீவலூா் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, தங்கள் கிராமம் அருகே செயல்படும் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்துக்கு நடமாடும் நியாய விலைக் கடையை இயக்க வேண்டும். சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனா். பின்னா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனா்.

