ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தல்
கோவில்பட்டி நகராட்சியில் ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்களுக்கு ஓய்வூதிய பண பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் உரிமை இயக்கம் தூய்மைப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சுடலைமணி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன் திரண்டு, நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஆரியங்காவிடம் அளித்த மனு:
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நிதி பற்றாக்குறை இருப்பதாகவும், தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, இறந்த பணியாளா்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் ஓய்வூதிய பண பலன்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.
ஆனால், ஓய்வு பெற்று ஒரு வருடத்திற்கு மேலாகியும், தற்போது வரை சேமநலநிதி மற்றும் ஈட்டிய விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வூதிய பண பலன்கள் வழங்கப்படவில்லை. எனவே, நிதி பற்றாக்குறையை சரி செய்து ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதிய பண பலன்கள் விரைந்து கொடுக்க வலியுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

