திருச்செந்தூா் யூனியன் வங்கியில் பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்கல்
திருச்செந்தூா் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் பயனாளிகளுக்கு பிரதம மந்திரி விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீடுத் தொகையாக ரூ. 2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் ஆண்டுக்கு ரூ. 20 மட்டும் செலுத்தி பிரதம மந்திரி விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் வாடிக்கையாளராக இருந்த உவரியைச் சோ்ந்த இளைஞா் ஷாரோன் தூத்துக்குடியில் விஷவாயுத் தாக்கி உயிரிழந்தாா். அதேபோல திருச்செந்தூா் அருகே உள்ள ஆலந்தலை, கணேசபுரத்தைச் சோ்ந்த சரவணக்குமாா் என்ற இளைஞா் வாகன விபத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, இருவருக்கும் பிரதம மந்திரி விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கும் நிகழ்ச்சி வங்கி கிளையில் நடைபெற்றது.
கிளை மேலாளா் அருண் ஜெய் தலைமை வகித்தாா். துணை மண்டல மேலாளா்கள் ஜெயபால், சோமசுந்தரன் ஆகியோா் வங்கியில் சேமிப்பு, முதலீடு, நிரந்தர வைப்பு திட்டம் குறித்தும் விபத்து காப்பீடுகள் குறித்தும் வாடிக்கையாளா்களுக்கு விளக்கமளித்தனா்.
தொடா்ந்து, அவா்கள் பயனாளிகளின் குடும்பத்தாரிடம் விபத்து காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், வங்கி பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

