தஞ்சாவூர், டிச. 19: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் முன் போக்குவரத்து இடையூறைத் தவிர்க்க நடைமேடை அமைக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்க்கின்றனர்.
மாமன்னர் ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் சிற்பம், ஓவியம், ஆடல், பாடல், இலக்கியம், சமயம், பண்பாடு எனப் பல்வேறு துறைகளிலும் பண்பட்டு விளங்கும் தமிழ் மக்களின் சிறப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக உலகுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.
இக் கோயில் புகழ் பெற்றது என்றாலும், நிகழ்காலத் தலைமுறைக்கு தமிழர்களின் சிறப்புகளைத் தெரிவிக்கும் வகையில், அண்மையில் இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா நடத்தப்பட்டது.
தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பெரிய கோயிலுக்கு வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழா மற்றும் பெüர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விழாக் காலங்களில் இந்தக் கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கார் மற்றும் பேருந்துகள் நுழைவுவாயிலின் வலப்புறத்தில் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வகையில், கோயில் எதிரில் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனைக்குச் சொந்தமான ஓர் ஏக்கர் அளவிலான இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது அந்த இடத்தில் சுற்றுலாப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.
புதிய இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கோயிலுக்குள் செல்ல வேண்டுமெனில் சாலையைக் கடக்க வேண்டும். அந்தச் சாலை வழியாக தஞ்சாவூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு நகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. வல்லத்திலிருந்து மருத்துவக் கல்லூரி வழியாகவும், புதிய பேருந்து நிலையம் வழியாகவும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் பெரிய கோயில் முன் செல்லும் சாலை வழியாகச் சென்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் சாலையைக் கடப்பதில் இடையூறுகள் ஏற்படுகின்றன.
எனவே, சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து இடையூறின்றி கோயிலுக்குள் பாதுகாப்பாக செல்லும் வகையில், பெரிய கோயிலின் நுழைவு வாயிலுக்கு அருகில் தற்போது வாகனங்கள் நிறுத்த புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து நடைமேடை அமைக்க வேண்டும். கோயில் அகழியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பூங்கா வழியாக இறங்கிவரும் வகையில் இந்த நடைமேடையை அமைத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து கொடுக்கலாம்.
தற்போது கோயில் நுழைவு வாயிலின் வலப்புறத்தில் சுவர் அகற்றப்பட்டு, அகழி எல்லைக்குள் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அந்த இடத்தில் தொடர்ந்து வாகனங்கள் நிறுத்த அனுமதித்தால், இரவு நேரங்களில் வாகனங்கள் பள்ளத்துக்குள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, அந்த இடத்தில் எவ்வித வாகனங்களும் நிறுத்தாத வகையில் ஏற்கெனவே இருந்ததுபோல, சுவரை எழுப்ப வேண்டும்.
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கோயிலுக்குப் பாதிப்பு வராத வகையில், நடைமேடை அமைத்துக் கொடுக்க தொடர்புடைய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.