தஞ்சாவூர், ஜூன் 4: தஞ்சை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வந்த சிற்றுண்டி உணவகம் மீண்டும் திறக்கப்படுமா என காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலையொட்டி உள்ள ஆயுதப்படை மைதானம் அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சிற்றுண்டி உணவகம் இயங்கி வந்தது. இங்கு இட்லி ரூ. 1.50, பொங்கல், பூரி ரூ. 7, பக்கோடா, பஜ்ஜி, வடை, டீ ரூ. 2, முழுச் சாப்பாடு ரூ. 15, லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் ரூ. 7 என சுகாதாரமான முறையில் மலிவு விலையில் கிடைத்து வந்தது. இந்த வளாகத்தில் இயங்கி வந்த ஆயுதப்படை அலுவலகம், மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மனித உரிமை மற்றும் சமூக நீதி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட காவல் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.
இவர்கள் மட்டுமன்றி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தச் சிற்றுண்டி உணவகத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த உணவகம் மூடப்பட்டது.
தற்போது இந்த இடம் காவல் கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சிற்றுண்டி உணவகம் மூடப்பட்டதால், சிவாஜி நகர் செல்லும் வழியில் உள்ள தேநீர்க் கடை மற்றும் உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர் பொதுமக்கள். உணவுப் பண்டங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தச் சிற்றுண்டி உணவகம் மூலம் பயன் அடைந்து வந்த அனைவரும் அது மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டனர்.
மீண்டும் அந்த இடத்தில் சிற்றுண்டி உணவகம் திறப்பதற்தான அறிகுறிகள் தெரியவில்லை.
இந்த உணவகத்தை காவல் துறை அலுவலர்கள் நடத்த முடியவில்லை என்பதால்தான் மூடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, காவலர்கள் பயன் பெறும் வகையில் மணி மண்டபம் அருகே காவலர் சிறப்பு அங்காடி (மளிகைக் கடை) காவல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
எனவே, மூடப்பட்ட சிற்றுண்டி உணவகத்தை தனியாருக்கோ அல்லது மகளிர் சுய உதவிக் குழுவினரிடமோ ஒப்படைத்து, சுகாதாரமான முறையில், தரமான உணவு வகைகள் மலிவு விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவல் துறையினர் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.