சாதனை வீரரின் வேதனை தீருமா

திருச்சி, மார்ச் 2: சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன் பட்டம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திருச்சியைச் சேர்ந்த சாதனை வீரருக்கு கிடைக்க வேண்டிய எந்தப் பலனும்
Updated on
2 min read

திருச்சி, மார்ச் 2: சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன் பட்டம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திருச்சியைச் சேர்ந்த சாதனை வீரருக்கு கிடைக்க வேண்டிய எந்தப் பலனும் இன்றுவரை கிடைக்கவில்லை.

திருச்சியில் பெரியமிளகுப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆ. மணிகண்டன் (19). பிறவியிலேயே வாய் பேச முடியாத மணிகண்டனுக்கு 8 வயது வரை மனவளர்ச்சி குன்றியிருப்பது அவரது பெற்றோருக்குத் தெரியவில்லை.

அப் பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த போது மணிகண்டனுக்கு காது கேளாதிருப்பதும், அவருக்கு மனவளர்ச்சி குன்றியிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள காது கேளாத, மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்ட மணிகண்டன், அங்கு படிப்போடு தொழில்கல்வியும் பயின்றுள்ளார்.

மணிகண்டனுக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினரும், அவரது குடும்பத்தினரும் போட்டிகளில் பங்கேற்க அனுப்பிவைத்துள்ளனர். முதலில் திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில், 2009 ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மணிகண்டனுக்கு கிடைத்தது.

இதற்காக சென்னையில் நடந்த இந்திய அளவிலான தேர்வில் பங்கேற்று 75 புள்ளிகள் எடுத்து தேர்வு பெற்ற மணிகண்டன், மும்பையில் பயிற்சியும் பெற்றார்.

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட் தொடரில் 41 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மணிகண்டன், இந்தியா தங்கப் பதக்கமும், சாம்பியன் பட்டமும் பெறுவதற்கு காரணமாகத் திகழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து, 2010, ஜனவரி மாதம், அனந்த்பூரில் நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் சாம்பியன் போட்டியில் (பாரத்) நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். மேலும் ஒரு வெள்ளிப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் போட்டிகளின் மூலம் பெற்றுள்ளார் இவர்.

மேலும், அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற மனவளர்ச்சி குன்றியோருக்கான சைக்கிள் போட்டியில் பங்கேற்ற மணிகண்டனிடம் நல்ல சைக்கிள் இல்லாததால், நூலிழையில் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். போட்டியில் அவரால் நான்காவது இடத்தைப் பிடிக்க முடிந்தது.

தான் பங்கேற்கும் எல்லா போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி வரும் மணிகண்டனை ஊக்குவிக்க தனிக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தில்லியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கப்பட்ட ரூ. 18,000 த்தோடு சரி, அதன் பின்னர் எந்தவித உதவியும் வழங்கப்படவில்லை.

ஷகிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுவிட்டார். விளையாடுவதற்கு பேட் வாங்கித் தருமாறு கேட்க, ரூ. 800 விலையில் புதிய பேட்டை வாங்கிக் கொடுத்தேன்.

சைக்கிள் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்ற போது அதற்கான செலவுத் தொகையையும் நான்தான் கொடுத்தேன். இதுபோல, ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்கச் செல்லும் போதெல்லாம் எனது மகன் கேட்டதை வாங்கித் தந்து வருகிறேன். ஆனால், ஊனமுற்றோருக்காக மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையை வழங்கக் கோரி நானும் பல முறை விண்ணப்பித்து விட்டேன். ஆனால் அந்தத் தொகை வந்தபாடில்லை.

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று, நாட்டுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுத்துள்ள என் மகனுக்கு அரசு என்ன செய்ய நினைக்கிறதோ அதைச் செய்யட்டும், என்றார் மணிகண்டனின் தாய் செண்பகவள்ளி.

காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய இளைஞர் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வதற்கும், சாம்பியன் பட்டம் பெறுவதற்கும் உறுதுணை புரிந்திருக்கிறார்.

மாற்றுத் திறனுடையோரின் உரிமைகள் நிலை நாட்டுவோம் என்று முதல்வர் கூறியிருக்கிறார். வாய் பேச முடியாத, காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய என பல குறைபாடுகளுடன் இருந்தாலும், அதைப் பொருள்படுத்தாது சாதனையை நிகழ்த்தி வரும் இந்த இளைஞர் மீது அரசின் பார்வை படுமா?.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com