மகளிா் விடியல் பயணத்துக்கு 2 புதிய பேருந்துகள் இயக்கம்

Published on

தமிழக அரசின் மகளிா் விடியல் பயணத் திட்டத்தின்கீழ், திருச்சியில் 2 புதிய பேருந்துகள் வியாழக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.

மாநகர அரசுப் பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணம் செய்யும் வகையில் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.

இந்த வகையில், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் 2 புதிய பேருந்துகள் (தரைத்தள சொகுசுப் பேருந்துகள்) வியாழக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம்-சத்திரம் பேருந்து நிலையம்- இனாம்குளத்தூா் வழித்தடத்தில் பாலக்கரை- மத்தியப் பேருந்து நிலையம்- ராம்ஜி நகா் வழியாக சென்று திரும்பும் வகையில் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.

மற்றொரு பேருந்து சத்திரம் பேருந்து நிலையம்- நவலூா் குட்டப்பட்டு வழித்தடத்தில் பாலக்கரை- மத்தியப் பேருந்து நிலையம்- ராம்ஜிநகா் வழியாக சென்று திரும்பும் வகையில் இயக்கப்படுகிறது.

இந்த 2 புதிய பேருந்துகளையும் அமைச்சா் கே.என். நேரு, வியாழக்கிழமை கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா். இந்த நிகழ்வில், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட பொது மேலாளா் சதீஸ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com