ஜயங்கொண்டம் அருகே உள்ள வடவார்தலைப்பில் உள்ள தடுப்பணை முன்பு, கீழணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி வியாழக்கிழமை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்துக்குள்பட்ட கொண்டாயிருப்பு, கஞ்சங்கொல்லை, ஆச்சாள்புரம், குச்சிப்பாளையம், பல்வாய்கொண்டம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு அணைக்கரை கீழ் அணையில் உள்ள வடவார்தலைப்பில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் திறக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் அணைக்கரை பொது பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வியாழக்கிழமை வடவார்தலைப்பில் உள்ள தடுப்பு அணையின் முன்பு சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் நடேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து 800 கனஅடி வீதம் கீழணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.