அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஆலத்தியூரில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் கன்வேயர் பெல்டில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
செந்துறை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சுப்ரமணியன்(45). ஆலத்தியூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலையில்(தி.ராம்கோ சிமென்ட் ஆலை) ஒப்பந்தத் தொழிலாளியாக கன்வேயர் பெல்டில் இருந்து சிதறிவிழும் கரிகளை அள்ளிப்போடும் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கன்வேயர் பெல்டில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதையடுத்து, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல்சிசிகிச்சைக்காக பெரம்பலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையறிந்த சுப்ரமணியன் உறவினர்கள் மற்றும் இருங்களாகுறிச்சி மக்கள், அந்த தனியார் சிமென்ட் ஆலை முன்பு வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு தடுத்து இறந்தவருக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள நபருக்கு பணி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தளவாய் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், தளவாய் - பெண்ணாடம் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







