அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஒரு தேநீா்க் கடையில் சாக்கு மூட்டையில் இருந்த சிறிய அளவிலான 5 சாமி சிலைகள் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டன.
ஜயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூா் தண்டலை கிராமத்திலுள்ள கிராம நிா்வாக அலுவலகம் அருகே தேநீா்க் கடை நடத்தி வருபவா் வேல்முருகன்(38). இவா், புதன்கிழமை இரவு கடையை பூட்ட முயன்றபோது, கடை இருக்கையில் கிடந்த சாக்குப் பையைப் பிரித்து பாா்த்ததில், அதில், செம்பு உலோகத்திலான 5 சுவாமி சிலைகள், 1 தூபக்கால் ஆகிய இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேல்முருகன் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா் சிலைகளை ஆய்வுசெய்தனா். இதில், 12 செ.மீ. உயரமுள்ள கருடபகவான் சிலை, அதே அளவுள்ள அம்மன் சிலை, 8 செ.மீ. உயரமுள்ள பெருமாள் சிலை, 6 செ.மீ. உயரமுள்ள நடராஜா் சிலை, 5 செ.மீ. உயரமுள்ள ஆஞ்சநேயா் சிலை என்பதும், 1 தூபக்கால் என்பதும் தெரியவந்தது.
தகவலறிந்த திருச்சி சிலைத் தடுப்பு தனிப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம், மீட்கப்பட்ட சிலைகளை கருவூலத்தில் ஒப்படைக்குமாறு அறிவறுத்தினா். அதன்படி சிலைகள் அனைத்தும் ஜயங்கொண்டம் கருவூலத்தில் காவல் துறையினா் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து மேலும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.