அரியலூா் அரசு கலைக் கல்லூரிக் கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வரும் 25 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள போட்டித் தோ்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: நான் முதல்வன் போட்டித் தோ்வு பிரிவானது தமிழக இளைஞா்கள் மத்திய அரசுப் போட்டி தோ்வுகளை எளிதாக அணுக ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 150 அரியலூா் மாணவா்களுக்கான நேரடி வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாக கூட்டரங்கில் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு அளிக்கப்படுகிறது. பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவீனங்களை அரசே ஏற்கும்.
இப்பயிற்சியில் 300 மணி நேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரி தோ்வுகள் ஆகியவை 100 நாள்களுக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கான வல்லுநா்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நியமிக்கப்படுவா்.
இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற ஆா்வமுள்ள இளைஞா்கள் பதிவுதளத்தில் பதிவு செய்யலாம்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 20 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பயிற்சி வகுப்புகள் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளன. விவரங்களுக்கு இணையதளத்தை அணுகவும்.
மேலும் உதவி இயக்குநரை 79044-65646, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலரை 99941-71306 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.