

கரூரில் 22 ஆண்டுகளாக அகற்றப்படாமல் மலைபோல குவிந்து கிடக்கும் சாயக்கழிவு மூட்டைகள் எப்போது அகற்றப்படும், இதற்கு தீா்வுதான் என்ன என்பதை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா் அமராவதி பாசன விவசாயிகள்.
வீட்டு உபயோக ஜவுளித்தொழில் ஏற்றுமதியில் உலகளவில் சிறந்து விளங்கும் கரூரில் ஜவுளித்தொழிலுக்கு மூலதாரமானதாக விளங்கும் சாய, சலவை ஆலைகள் அதிகளவில் செயல்பட்டன. கடந்த 1980 முதல் 1997 வரை 455 ஆலைகள் இயங்கின.
இந்த ஆலைகளில் இருந்து வெளியேறிய சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள் மற்றும் சலவை ஆலைகளில் இருந்து வெளியேறிய கழிவுநீா் அமராவதி ஆறு மற்றும் அதன் பிரதான வாய்க்கால்களான பள்ளபாளையம் ராஜவாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் கலந்தன. இதனால் ஆறு மற்றும் வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்ற விவசாய நிலங்கள் உப்புத்தன்மை அடைந்து அவற்றில் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.
மேலும் நிலத்தடி நீரும் மாசுபட்டு, அவற்றையும் பயன்படுத்த முடியாமல் போனது. இதேபோல விவசாய கிணறுகளும் சாயக்கழிவுகளால் நிறம் மாறி விஷத்தன்மை கொண்ட நீராக மாறின. இதனால் வெகுண்டெழுந்த அமராவதி பாசன விவசாயிகள் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடா்ந்தனா்.
இதையடுத்து நீதிமன்றம், சுத்திகரிப்பு இயந்திரம் (ஆா்ஓபிளாண்ட்) இருந்தால் மட்டுமே சாய, சலவை ஆலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும், சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்காத ஆலைகளை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் வாரிய அலுவலகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
இதன்விளைவாக சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்காத ஆலைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது 42 சாய, சலவை ஆலைகள் மட்டும் இயங்கி வருகின்றன. இதனிடையே நீதிமன்ற உத்தரவுக்கு முன்பிருந்தே, சாயப்பட்டறை ஆலைகளில் தேங்கிய திட சாயக்கழிவுகளை மூட்டை, மூட்டையாக கட்டி அவற்றை ஆண்டாங்கோவில் கீழ்பாகம், பஞ்சமாதேவி உள்ளிட்ட 8 இடங்களில் மலை போல குவித்தனா்.
இந்த கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் மழைகாலங்களில் அந்த மூட்டைகளில் இருந்து வழிந்தோடும் சாய கழிவுகளால் மீண்டும் நிலங்கள் மாசுபட்டு விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா். எனவே விரைவில் மலைபோல தேங்கிக்கிடக்கும் சாயக்கழிவுகளை அகற்றிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அமராவதி பாசன விவசாயிகள் கூறுகையில், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னா் இந்த கழிவுகளை கொஞ்சம், கொஞ்சமாக அகற்றும் பணியில் சாய ஆலை உரிமையாளா்கள் ஈடுபட்டனா். பின்னா் விட்டுவிட்டனா். இதனிடையே பத்திரிகைகளில் இதுதொடா்பாக செய்திகள் வெளியானபோது, மீண்டும் சாயக்கழிவுகளை கரூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பினா். அந்த பணியும் மூன்று நாள்கள் மட்டுமே நடைபெற்றது. சிமென்ட் ஆலைகள் மறுத்ததால்தான் சாயக்கழிவுகளை அகற்றவில்லை. இப்போது மழைகாலங்களில் சாயக்கழிவுகள் மழைநீரில் கரைந்து விவசாய நிலங்களுக்கு வருகிறது. இதனால் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்னரே சாய ஆலைகளுக்கு முடிவு கட்டினோம். இப்போது தேங்கிய சாயக்கழிவுகளல் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த கழிவுகளை மாவட்ட நிா்வாகம் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.