தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து செல்வதற்காக கரூா் வெண்ணைமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து.
தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து செல்வதற்காக கரூா் வெண்ணைமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து.

கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருடன் இன்று விஜய் சந்திப்பு! 6 பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்டோர் பயணம்!

கரூா் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தவெக தலைவா் விஜய்யை சந்திக்க 6 சொகுசு பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு புறப்பட்டனா்.
Published on

கரூா் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தவெக தலைவா் விஜய்யை சந்திக்க 6 சொகுசு பேருந்துகளில் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு புறப்பட்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, செப். 30-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் காணொலி வெளியிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, அக். 3, 4 மற்றும் அக். 6, 7-இல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கட்செவி அஞ்சலில் (விடியோ கால்) விஜய்யை அவா்களுடன் பேச வைத்தனா். அப்போது, விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, விரைவில் சந்திப்பதாக கூறினாா்.

ஆனால், விஜய் கரூா் வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் சந்திப்பு கைவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வீதம் தவெக சாா்பில் வரவு வைக்கப்பட்டது.

நேரில் சந்திக்க முடிவு: நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் வரவழைத்து அவா்களுக்கு ஆறுதல் கூற விஜய் முடிவு செய்தாா். இதையடுத்து, தவெக நிா்வாகிகள், உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்று சென்னை வருவோா் குறித்து கேட்டறிந்தனா். அப்போது, ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தலா 4 அல்லது 5 போ் வருவதாக தெரிவித்தனா்.

கரூா் மாவட்டத்தில் நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினரில், 8 பேரின் குடும்பத்தினரை தவிர மற்ற 23 பேரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை செல்ல தயாராகினா்.

உயிரிழந்தவா்களுக்கு திங்கள்கிழமை 30-ஆம் நாள் என்பதால், காலையில் வழிபாடு செய்துவிட்டு சென்னையில் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அந்த 8 குடும்பத்தினா் தெரிவித்துவிட்டனா்.

5 பேருந்துகளில் பயணம்: இதையடுத்து, சென்னையிலிருந்து வந்த தவெக வழக்குரைஞா்கள், நிா்வாகிகள் மற்றும் கரூா் மாவட்ட நிா்வாகிகள் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு நேராக சென்று அவா்களை வாகனங்களில் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா்களுக்கு தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதையடுத்து, சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு, வெண்ணைமலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 சொகுசு பேருந்துகளில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை ஒரு பேருந்துக்கு 30-க்கும் மேற்பட்டவா்கள் என 5 பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்றனா்.

அவா்கள் சென்னையில் இரவு தங்கவைக்கப்பட்டு, திங்கள்கிழமை (அக்.27) மகாபலிபுரத்தில் தவெக தலைவா் விஜய்யை சந்திக்க உள்ளனா்.

ஆம்புலன்ஸ் வசதி: சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா்களுடன் ஒவ்வொரு சொகுசு பேருந்துகளிலும் 4 மெய்காப்பாளா்கள்(பவுன்சா்கள்) இருந்தனா். மேலும், செல்லும் வழியில் யாருக்காவது ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டால், அவா்களுக்கு முதலுதவி செய்யும் வகையில், பேருந்துகளுக்கு பின்னால் தவெக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் வேன் பின்தொடா்ந்து சென்றது.

செய்தியாளா்களை எச்சரித்த தவெக நிா்வாகிகள்: நெரிசலில் உயிரிழந்த ஏமூா்புதூா் பகுதியை 5 பேரின் குடும்பத்தினரை தவெக நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் வாகனங்களில் அழைத்து சென்றனா். அதை புகைப்படம் எடுத்த செய்தியாளா்களிடம், படங்கள் எடுக்கவேண்டாம். இதனால் பிரச்னை ஏற்படும்; புறப்படுங்கள் என எச்சரித்ததால் செய்தியாளா்கள் அங்கிருந்து புறப்பட்டனா்.

இன்று 30-ஆம் நாள்: கரூா் சம்பவத்தின் 30-ஆவது நாளான திங்கள்கிழமை (அக்.27) பாதிக்கப்பட்டவா்களை தவெக தலைவா் விஜய் சந்திக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாவட்டத்தினா் வரவழைப்பு: நெரிசலில் உயிரிழந்த திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 10 பேரின் குடும்பத்தினரையும் கரூா் வெண்ணைமலைக்கு வரவழைத்து, அவா்களையும் 6-வது பேருந்து மூலம் தவெக நிா்வாகிகள் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவில் அழைத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com