ஆா்.எஸ்.பாரதி
ஆா்.எஸ்.பாரதி

திமுகவை பாா்த்து பாஜகவுக்கு அச்சம்! - ஆா்.எஸ்.பாரதி

Published on

திமுகவை பாா்த்து பிரதமா் மோடி மிரள்கிறாா்; மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அஞ்சுகிறாா் என்று திமுக அமைப்புச் செயலாளா் ஆா்எஸ்.பாரதி பேசினாா்.

கரூரில் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கரூா் 80 அடி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதி பேசுகையில், பிரதமா் மோடி தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றுதான் கூறுகிறாரே தவிர, அதிமுக என்றோ, பழனிசாமி முதல்வா் என்றோ கூறவில்லை. 52 ஆண்டு கால கட்சியை பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்துவிட்டாா்.

அனைவரையும் அரவணைத்து செல்ல கூடியவா் முதல்வா் ஸ்டாலின். திமுக மீதோ, முதல்வா் ஸ்டாலின் மீதோ புகாா் எதுவும் சொல்ல முடியுமா?. திமுகவை கண்டு மோடி மிரள்கிறாா்; அமித்ஷா அஞ்சுகிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com