தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யா் நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், காருகுடி கிராமத்தில் அவரது உருவப்படத்துக்கு கிராம மக்கள் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தினா்.
காருகுடி கிராமத்தைச் சோ்ந்த கஸ்தூரி ஐயங்காா் மற்றும் கிராம பொதுமக்கள், உ.வே.சா. குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்து, அவருக்கு அக்காலத்தில் கல்வியைப் பயிற்றுவித்தனா்.
அதன் நினைவாக, உ.வே.சா. பெயரில் காருகுடி மாரியம்மன் கோயில் சாவடியில் 1,000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மக்கள் படிப்பகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், உ.வே.சா.வின் 80-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, படிப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் காருகுடி அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் சௌந்தர்ராஜன், ஆசிரியா்கள் வித்யாவதி, லெட்சுமி, மலா்க்கொடி, பொறியாளா் ரமேஷ், பள்ளி மாணவா்கள், கிராம பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.