புதுக்கோட்டை அருகே துப்பாக்கிப் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு(சிஐஎஸ்எஃப்) துப்பாக்கிச் சூடு பயிற்சி அளிக்கும் தளம் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி(11) என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.
இதனை தொடர்ந்து புதுகோட்டை அரசுத் தலைமை மருத்துவமனையில் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
அங்கு அவருக்கு உயர் சிகிச்சை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சுடும் தளத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனக் கோரி நார்த்தாமலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், புதுக்கோட்டை - திருச்சி சாலையில் ஒரு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.